Tuesday 18 November 2014

பொழுது புலர்ந்தது…!!!


           பறவைகளின்  க்ரீச்..  க்ரீச்…  சத்தம்.  பொழுது  புலர்கிறது. அதிகாலை வேளையில்  அச்சத்தம்  இனிமையாக  கேட்கிறது. விழித்தும்  எழ மனமில்லாமல்  பறவைகளின்  அந்நாளின் வரவேற்பைக் கேட்டவண்ணம்  படுத்துக்  கிடப்பது  தனி  சுகம். விடுமுறை நாள் என்றால்  கேட்கவே  வேண்டாம்.



          அதிகாலையில்  எழுந்ததும்  அவைகளைக்  காண  கண்கள் தேடும். அந்த மாமரத்தில் சிட்டுக் குருவிகள் கிளைக்கு கிளை தாவித்தாவி மகிழ்ந்தன. என்னமோ பேசிக்கொள்கின்றன. மும்மரமாக அவைகளின் ஆர்ப்பாட்டத்தில் ஒர் ஈர்ப்பு... இருக்கின்றது அல்லவா…? சின்ன உருவம் டபக்… டபக்… என சிறகை அடித்துக் கொண்டு,( மின்னல்….. அப்படின்ன உடனே டபக் என காணாமல் போகும் பெண், அந்த சினிமாவின் நகைச்சுவை காட்சி போல )  உட்கார நேரமில்லாமல் அவைகள் போடும் ஆட்டம் இருக்கிறதே….!!! அப்பப்பா… எப்படி சொல்வது…?  ம்…..

ஆவிபறக்க குளம்பியோடு வந்தமர்ந்தேன், அவைகளின் ஆட்டத்தை 
தொடர்ந்து காண. கண்களை மூடிய வண்ணம் ஒவ்வொரு மிடராக 
குளம்பியைச் சுவைத்து விழுங்கியவண்ணம் பறவைகளின் ஒலிகளை 
ரசித்துக் கேட்டேன். பகலும் இரவும் கைகுழுக்கி சந்தோஷமாய் பிரிகிற வேளை, அப்படி ஒரு ஆழமான அமைதி அதிகாலை வேளை தான்.
இவ்வேளை எனக்கு மிகவும் பிடித்தமான நேரம்.

சூரியன் வரும் முன் எழுந்தாலே சுறுசுறுப்பு தானாய் வந்து விடுகிறது. அன்று முழுவதும் தொடர்ந்து இருக்கும். ஏதோ ஒரு சக்தி அவ்வேளைக்கு உண்டு என்பதில் எனக்கு ஒரு ஆழ்ந்த நம்பிக்கை. ஏன் என்றால் நான் எப்போது எல்லாம் அப்படி எழுகிறேனோ… அன்றைக்கு எல்லாம் நான் சுறு சுறுப்பாக சக்தியோடு இருப்பேன். சில நாட்கள் நேரமாகித் தூங்கப் போனால்,அடுத்த நாள் விரைவில் முழிப்பு வந்தாலும் இன்று சற்று தாமதமாக எழலாம் எனத் தோன்றும். அப்படித்தானே….? அப்படி சூரியன் வந்து என்னை வரவேற்கும் போது சூரியன் சுறுசுறுப்பாகி விடுகிறான். எனக்குத் தான் சோம்பேறித்தனம் வந்து விடுகிறது. இதை எத்தனையோ தடவை பரீட்சார்த்தம் பண்ணியாகிவிட்டது.

அந்த இளங்காலை மேல் எனக்கு அப்படி ஒரு பிரியம். ஏனோ…? அன்றைக்கு நிறைய நேரம் கையில் இருப்பதாய் தெம்பாய் தோன்றும். வேளைகளும் சீக்கிரம் முடிந்து விடும். லேசான குளிர் காற்று, சுற்றுப்புறம் எல்லாம் அமைதி. உடப்பு சிலிர்க்கும். குளம்பியின் சுவை நாவில் அமிர்தமாய் இருக்கும்.

சில நாட்கள் எனக்கு அப்போது கவிதை தானாய் ஊற்றெடுக்கும். அன்றைய நாளுக்கான திட்டமிடல் தெளிவாய் வரும்.

மரங்களும், பூக்களும், செடி கொடிகளும் பசுமையாய் கண்களைக் குளிர்விக்கும். தூரமாய் நீளவானம் மேகங்களோடு விளையாடும். 

சிட்டுக்குருவி, புறா, காகம்,அணில், மரங்கொத்தி, மைனா என காலை வேளை களைகட்டும்.இவைகளுக்கு சிறு தானியங்களும், நீரும் வைத்து விட்டு வருவேன். அவைகள் கொத்தி கொத்தி தின்பதும், இலைகளின் நடுவில் ஓடி வந்து அணில் தானியங்களை எடுத்து முன்னங் கால்களை கைகள் போல் வைத்துக் கொரிப்பது அழகோ அழகு. காக்கைகளோ கரைந்து கரைந்து அதன் நண்பர்களை அழைத்து விட்டு வாயில் அள்ளிக் கொண்டு பறக்கும். சிதறுவதை வேலைக்கார எறும்புகள் நோட்டம் விட்டு விட்டு கூட்டத்தினரை படையாய் அழைத்து வரும். ஒழுங்கு என்றால் ஒழுங்கு தான்…!!! வரிசையாய் அணிவகுத்து வரும் போகும். யார் இவற்றிற்கு சொல்லிக் கொடுத்தது…?

செல்லங்களை ரசித்து விட்டுச் செல்வேன் என் பணிகளை ரசித்துக் கொண்டேசெய்ய. நாளை வரை எதிர் பார்த்து இன்புற்றிருப்பேன்.

பொழுது புலர்ந்தது
பொங்கி வந்தது ஆனந்தம்
நண்பர்கள் அவைகள்
நட்போடு பார்த்தன
இன்பமும் ஏற...
இனிய கீதங்கள் பரவ
ஆர்ப்பாட்ட நாளும்
அழகாய் மலர்ந்தது.


சில வருடங்கள் முன்பு வாழ்ந்த வீட்டில் இப்படி ஒரு சூழ்நிலை. அதன் நினைவே இப்பகிர்வு. 


படம் கூகுள் நன்றி

நன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி.            

30 comments:

  1. உங்களுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். (இருக்கும் இடங்களின் தூரத்தைப் பிற்றி சொல்லவில்லை). காலையில 6.45 மணியைப் போல் எந்திரிச்சு, அரக்க பரக்க 7.30 மணிக்கெல்லாம் அலுவலகத்துக்கு கிளம்புறதே பெரும்பாடாக இருக்கிறது. இதுல அதிகாலையில் எழுந்து குளம்பியை குடித்துக்கொண்டு, பறவைகளை ரசிக்கிறதாவது....

    நீங்கள் ரசியுங்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. சரி சரி...விடுங்க சகோ ..உங்களுக்கும் இது மாதிரி நேரம் கிடைக்கும் போது ரசித்துக் கொள்ளலாம்.....சின்ன வயசுல சுறுசுறுப்பாகத் தானே இருக்கனும்...ஹஹஹஹஹா...

      Delete

  2. வணக்கம்!

    காலைப் பொழுதில் கனிந்திட்ட காட்சிகள்
    ஆளை அசத்துமென ஆடு!

    தமிழ்மணம் 1

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா..

      காலை கொடுக்கும் காட்சியின் இனிமை
      கடவுள் கொடுத்த வரம்

      நன்றி ஐயா

      Delete
  3. பொழுது புலர்ந்தது
    யாம் செய்த தவத்தால் என்னும்
    பாரதியாரின் பாடலும்
    ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் என்னும்
    கவியரசரின் பாடலும் நினைவுக்கு வந்து போனது
    காலைப் பொழுதைப் போல்
    அற்புதமான அழகான பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. காலை கட்டியிழுக்கும் ஆனந்தம் கொடுக்க
      காணல் தவிரென்ன வேலை.

      நன்றி ஐயா

      Delete
  4. வணக்கம்
    சகோதரி

    அருமையான மலரும் நினைவுகள் எழுதிய விதமும் கற்பனையும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம3
    என்பக்கம் சிறுகதையாகவாருங்கள். அன்புடன்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை):
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. இனிய ரசனையை ரசித்தேன்...

    ReplyDelete
  6. இனிய இளங்காலைப் பொழுதில் சுகமான நினைவுகள்..
    வாழ்க.. வளர்க..

    ReplyDelete
    Replies
    1. சுகம் சுறுசுறுப்பு சுண்டியிழுக்கும் தனிமை
      சுவைதரும் ஆன்மா லயிப்பு

      நன்றி ஐயா

      Delete
  7. மிகவும் ரசித்து எழுதப்பட்ட ரசனையான அனுபவம்! அழகு நடையில். உண்மைதான் அதிகாலை எழுவது மிகவும் சுறு சுறுப்பாக இயங்க வைப்பது மட்டுமல்லாமல், நிறைய நேரம் கிடைப்பது போலவும் இருக்கும்...மட்டுமல்ல நீங்கள் சொல்லி இருப்பது போல் ரசிக்கவும் முடியும்.....ஆம் அதைத்தானே Early to bed early rise makes a man healthy wealthy and wise....

    ரசித்துப் படித்தோம் விஷுவலாக மனதுள்....

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்தோம் விஷுவலாக மனதுள்....
      உங்களுக்கும் விஷுவலுக்கும் நெருக்கம் இல்லையா..ஹஹஹா..
      நன்றி

      Delete
  8. இயற்கையை ரசிக்கும் இனிய மனத்தின் படைப்பினைக் கண்டு ரசித்தேன்
    அருமை !வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  9. சிறப்பான ரசனை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. என்ன அழகான வர்ணனை .... உங்கள் ரசனை மென் மேலும் வளரட்டும் ... வாழ்த்துக்கள் அக்கா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ரசனை மென் மேலும் வளரட்டும்//

      நன்றி சகோ

      Delete
  11. பழமையான நினைவலைகள் அருமை.

    ReplyDelete
  12. இயற்கையை அன்று ரசித்தீர்கள் ,இன்றும் அந்த ரசனைத் தொடர்கிறதா :)
    த ம 7

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். சிட்டுக்குருவி,புறா, வேறு வகையான பறவைகள்,

      கடல்.... அது வேறு வேறு நிறத்தில் அவ்வப்போது மாறி விரிந்து கிடக்கும். அதிலே மிதக்கும் ராட்ஷச கப்பல்கள், சூயஸ் கால்வாய்.

      கப்பலின் ஒலி (ஹாரன்) அது சூயஸ் கால்வாயில் நுழையும் போது விட்டு விட்டு கொடுத்துக் கொண்டே போகும், மேகம், வானம், ....என தொடர்ந்து கொண்டே தான் இருக்கிற்து

      தொடரும்...நன்றி,

      Delete
  13. அருமையாய் இருந்தது உங்களின் நினைவலைகள்.

    இங்கே குளிரில் ஏன்டா பொழுது விடிகிறது என்றிருக்கும் தோழி....(

    ReplyDelete
    Replies
    1. இங்கே குளிரில் ஏன்டா பொழுது விடிகிறது என்றிருக்கும் //

      ஆம் எங்களுக்கும் இனிமேல் ஆரம்பித்து விடும். குளிரைப் பற்றி ஒரு பதிவே போட்டு இருக்கிறேன். அப்பப்பா...ஏன்ன செய்வது...ம்

      நன்றி

      Delete
  14. அருமையான‌ ரசனையுடன் புலரும் விடியற்காலைப்பொழுதைப்பற்றி அழகாய் எழுதியிருக்கிறீர்கள்! புலர்ந்தும் புலராத அந்த நேரம் மிகவும் பரிசுத்தமானது என்பதுடன் அதை அமைதியாக ரசிப்பதும் மனதை நாள் முழுவதும் தெளிவாக வைத்துக்கொள்ள‌வும் உதவும். தனித்து ரசித்தாலும் சரி, மனதிற்கு இனியவர்களுடன் ரசித்து அரட்டையடித்தாலும் சரி, எல்லாமே இனிமை தான்!!

    ReplyDelete
    Replies
    1. புலர்ந்தும் புலராத அந்த நேரம் மிகவும் பரிசுத்தமானது என்பதுடன் அதை அமைதியாக ரசிப்பதும் மனதை நாள் முழுவதும் தெளிவாக வைத்துக்கொள்ள‌வும் உதவும். தனித்து ரசித்தாலும் சரி, மனதிற்கு இனியவர்களுடன் ரசித்து அரட்டையடித்தாலும் சரி, எல்லாமே இனிமை தான்!!//
      ஆம்...சகோதரி.

      Delete
  15. கனவில் வந்த காந்தி

    மிக்க நன்றி!
    திரு பி.ஜம்புலிங்கம்
    திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

    புதுவைவேலு/யாதவன் நம்பி
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

    ReplyDelete

  16. இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

    ReplyDelete