Tuesday 28 July 2015

இசைக் குறிகளின் தோரணங்கள்....!!!





வானம் அறிவித்தது
இசை மழை பொழிய இருக்கிறது என்று...
வான மேடையில் சப்தங்கள்...
தாயாராகின்றன போலும்


வீட்டினுள்ளே
ஒலிபெருக்கியின்
ஓசைகள் காதையடைத்தன...

மேகங்கள் ஒன்று கூடி
கரிய ஆடையுடுத்தி வந்தன
அவர்களின் சீருடைகள்
என்றும் ஒன்று போல் அல்லவா...?

உலகின் குளிர்சாதனப் பெட்டி
இயங்கத்தொடங்கியது...
ஆஹா....அற்புதம் ஆனந்தம்...
அதிவேகத் தென்றலின்
அரவணைப்பு...!!!

சூரியனும் ஒதுங்கிப் போனான்
சற்று இளைப்பாற...
மறைந்திருந்து அவனும் மகிழ்கிறான்

குழந்தைகளின் பார்வைகள்
வானைநோக்கி...
இல்லத்தரசிகளின் பார்வைகள்
கொடிகளை நோக்கி...
அவரவர்கள் மும்முரமானார்கள்...


சோ....சோ...வென மழை இசைக்க
கிர்...கிர்...கிர்ரெ... உடன் கைகோர்த்தான் காற்று நண்பன்
டொய்ங்...டொய்ங்...டொய்ங்...
குடிசைக்குள் வந்திசை வாசித்தது மழை

சாரல் அடித்தது பொறுக்காமல்
வா வெளியே...இல்லை
போ உள்ளே...என்று

மழையில் நனைய முடியவில்லை
மழையை விட்டு விலகவும் மனமில்லை
பட்டாளைத் தூணில்
சாய்ந்தமர்ந்து ரசித்தேன் அதன் அழகை

இசைக் குறிகளின் தோரணங்கள்....
நடுவாசலில் ஜாலங்கள் புரிய...
கண்கள் சங்கமித்து நின்றன

சாரல் முத்தமிட
காலம் கட்டிக் கொள்ள
மனம் மயங்கியிருக்க
இசையின் ஓசையில்
இதயத்தை தொலைத்தேன்



19 comments:

  1. அற்புதம் அற்புதம்
    மழைபோல் கவிதையும் மனதை குளிர்வித்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி ஐயா, தங்களை போன்றோர்களின் உற்சாக கருத்துக்கள் தான் என்னை மேலும் மேலும் படைக்க வைக்கிறது.
      நன்றி

      Delete
  2. Replies
    1. தொடர்வருகைக்கும் ,என்னை விடாது ஊக்குவிற்பதற்கும்,,,மிக்க மகிழ்ச்சி சகோ நன்றிகள் பல.

      Delete
  3. எங்கேயோ போய்விட்டீர்கள்.......!

    இசைக்குறிகளின் தோரணங்கள்........

    இப்படிப்பட்ட சொல்லாடல்களை எல்லாம் எங்கிருந்து பிடிக்கிறீர்களோ !!!!!

    த ம 4

    ReplyDelete
    Replies
    1. திடீரென தோன்றும் வார்த்தைகள் சகோ இவைகள்.....இது போல் உள்ள என் கவிதைச் சொற்களை தாங்கள் பாராட்டும் போது தான்...எனக்கே இவைகள் நல்ல சொல்லாடலோ என்று எண்ணத் தோன்றுகிறது.

      மிக்க நன்றி சகோ.

      Delete
  4. **சாரல் முத்தமிட
    காலம் கட்டிக் கொள்ள
    மனம் மயங்கியிருக்க
    இசையின் ஓசையில்
    இதயத்தை தொலைத்தேன்**
    ஒ! நானும் தான் தோழி! அருமையான மழை!!

    ReplyDelete
  5. நல்ல ரசனை. நாங்களும் ரசித்தோம்.

    ReplyDelete
  6. மழைச்சாரலாகக் குளிர்கின்றது - கவிதை..

    அழகான மழைப் பொழுதை - கண் முன் நிறுத்தி விட்டீர்கள்.. மகிழ்ச்சி..

    ReplyDelete
  7. மழை வருவது முகிலுக்குத் தெரியாது
    நமக்குத் தெரிந்து விடுமே!

    சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  8. பொழியும் மழையை உணர வைக்கிறது வரிகள். அருமை.

    "ஓம் ஓம் என் உறுமிற்று வானம்" நினைவுக்கு வந்தது.

    படம் அழகு. வீழும் மழை வீட்டுக்குள் பெய்தால் என்ன சுகம்....

    ReplyDelete
    Replies
    1. வீழும் மழை வீட்டுக்குள் பெய்தால் என்ன சுகம்..//

      உண்மை தான் என்ன சுகம் என்ன சுகம் தான்...

      நன்றி

      Delete
  9. ஆஹா! மிகவும் இனிமையான இசைத் தோரணம்! நாங்கள் அடிக்கடிச் சொல்லும் வார்த்தைகள்! குறிப்பாக கீதா....மத்தளம் கொட்ட, வானின் கரிய ஆடை மினுமினுக்க, இசை மழைத் துளிகள் தோரணமாய், என் வீட்டு முற்றத்தை அலங்கரிக்க.....என்று கல்லூரியில் எழுதியதுண்டு...30 ஆண்டுகளுக்கு முன் இன்னும் முழுவதும் இங்கு சொல்லவில்லை...

    அருமையான வரிகள்! மிக மிக ரசித்தோம்...அந்தப் படம் எங்கள் வீட்டுமுற்றத்தை நினைவூட்டியது..இப்படித்தான் பெய்யும் எங்கள் ஊரில் மழை அடை மழை பெய்யும்....அழகு..

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! மிகவும் இனிமையான இசைத் தோரணம்! நாங்கள் அடிக்கடிச் சொல்லும் வார்த்தைகள்! குறிப்பாக கீதா....மத்தளம் கொட்ட, வானின் கரிய ஆடை மினுமினுக்க, இசை மழைத் துளிகள் தோரணமாய், என் வீட்டு முற்றத்தை அலங்கரிக்க.....என்று கல்லூரியில் எழுதியதுண்டு...30 ஆண்டுகளுக்கு முன் இன்னும் முழுவதும் இங்கு சொல்லவில்லை.//

      அதை பதிவிடுங்கள் சகோ.....எல்லோரும் வாசிக்க காத்திரிக்கிறோம்..

      நன்றி

      Delete
  10. ஜீவி என்னும் வலையுலக நண்பர் ஒரு முறை மழைபற்றிய பதிவோ பின்னூட்டமோ எழுதி இருந்தார். அதை நினைவு படுத்த முயன்று தோற்கிறேன் அந்தப் பதிவின் தாக்கம் இப்போது இதைப் பார்த்ததும் எழுகிறது. மழை பற்றிய அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete